Budget 2023: இன்று கூடும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

| Updated: 31 Jan 2023, 10:03 am

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்

2023ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையாற்றுவார். இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரையாற்றுவது இதுவே முதல் முறை. அதனால் இவரின் உரை கூடுதல் கவனம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
parliament- et tamil

இந்த கூட்டம் முடிந்த பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள், பொருளாதாரத்தை உயர்த்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல் இடம் பெற்றிருக்கும்.

பொருளாதார ஆய்வறிக்கை குறித்து இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு நிதியமைச்சர் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் இரு தினங்கள் பூஜ்ஜிய நேரம் மற்றும் கேள்வி நேரம் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது பிரதமர் மோடி குறித்த பிபிசி வெளியிட்ட ஆவணப் பட விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, கூட்டாட்சித் தத்துவம், வேலைவாய்ப்பின்மை பிரச்னைகள் குறித்து விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.