Please enable javascript.ADSP Velladurai Suspend : நாளை ஓய்வு, இன்று சஸ்பெண்ட்... அப்படி என்ன வழக்கு? சிக்கிய என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை!

நாளை ஓய்வு, இன்று சஸ்பெண்ட்... அப்படி என்ன வழக்கு? சிக்கிய என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை!

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 31 May 2024, 11:53 am
Subscribe

தமிழக காவல்துறையில் மிகவும் பிரபலமான அதிகாரியாக திகழ்ந்த வெள்ளத்துரை திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் இருக்கும் நிலையில் சஸ்பெண்ட் ஆனது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ADSP Velladurai
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பட்டியலை எடுத்து பார்த்தால் அது கட்டாயம் இடம்பெறும் பெயர் வெள்ளத்துரை. தமிழக காவல்துறையில் எஸ்.ஐ ஆக சேர்ந்து படிப்படியாக ஏடிஎஸ்பி வரை உயர்ந்தவர். சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு அதிரடி படையில் இடம்பெற்றவர். 2004ஆம் ஆண்டு வீரப்பன் என்கவுன்ட்டர் குழுவில் முக்கியமான நபராக இருந்தார். வெள்ளத்துரை மிகவும் பிரபலமானது மெரினாவில் அயோத்தியா குப்பம் வீரமணி என்கவுன்ட்டரில் தான்.

அதிரடி சஸ்பெண்ட்

இந்நிலையில் நாளை (ஜூன் ஒன்றாம் தேதி) பணி ஓய்வு பெறவுள்ளார். இன்னும் ஒருநாள் மட்டுமே பணியில் நீடிக்கவுள்ள நிலையில், இன்றைய தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வெள்ளத்துரையின் பணி ஓய்வு அமைதியான முறையில் இருக்க வேண்டும். எந்தவித சர்ச்சையும் வேண்டாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் பரிந்துரை செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதையும் மீறி சஸ்பெண்ட் உத்தரவு உள்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கொக்கி குமார் மரண வழக்கு

அப்படியென்ன வழக்கில் சிக்கியுள்ளார் என்று விசாரித்தால், ஜூன் 6, 2013 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் கொக்கி குமார் என்கிற ராமு (26) போலீஸ் கஸ்டடியில் இருந்த போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. விசாரணையில் காவல் ஆய்வாளர் எஸ்.கீதா இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இறுதி விசாரணை அறிக்கை

அதில், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு எதுவும் இல்லை. வழக்கை மூடிவிடலாம் என்பது போல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, அவரங்காடு ரயில் நிலையத்தில் சுரேஷ் என்பவரிடம் இருந்து 500 ரூபாயை கொக்கி குமார் திருடியுள்ளார். இதுபற்றி தகவலறிந்து சிறப்பு காவல் ஆய்வாளர் துரை சிங்கம் தலைமையிலான போலீசார் கொக்கி குமாரை பிடிக்க சென்றனர்.

சிவகங்கையில் வெள்ளத்துரை

அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அப்போது இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பள்ளம் ஒன்றில் விழுந்து கை, கால்களில் அடிபட்டது. உடனே மதுரையில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது சிவகங்கையில் தான் வெள்ளத்துரை பணியாற்றி வந்தார். இந்த வழக்கு தான் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மற்றொரு என்கவுண்ட்டர் வழக்கு

இதுதவிர மற்றொரு வழக்கும் சூடுபிடித்துள்ளது. 2003ஆம் ஆண்டு அயோத்தியா குப்பம் வீரமணி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் மெரினா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்த லாய்டு சந்திராவிடம் உள்துறை விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து வழக்குகள் தூசு தட்டப்படுவது வெள்ளத்துரைக்கு சிக்கலாக மாறி வருகிறது.
மகேஷ் பாபு
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்