ஆப்நகரம்

இன்று ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி 2024 : இந்த நாளுக்கு இத்தனை சிறப்புக்களா?

சங்கடஹர சதுர்த்தி என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்த, துன்பங்களை தீர்க்கக் கூடிய நாளாகும். அதிலும் ஆனி மாதத்தில் வருவது சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பானது. ஒருவர் எப்படிப்பட்ட கெட்ட கர்மவினையால் தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து வந்தாலும், அவர் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட்டால், கர்மவினைகளும், முன் ஜென்ம பாவங்கள், இந்த பிறவியில் கடந்த காலங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்களின் துன்பங்கள் படிப்படியாக குறைந்து, வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படுவதை காண முடியும்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 25 Jun 2024, 7:01 am
சதுர்த்தி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருபவர் விநாயகப் பெருமான் தான். மாதத்தின் இரண்டு சதுர்த்திகளில் தேய்பிறை சதுர்த்தி விரதம் மிகவும் விசேஷமானதாகும். இதையே நாம் சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத, தாங்க முடியாத மன வேதனையில் இருப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை மனதார வழிபட்டால் அவர்களின் பிரச்சனையை வேரோடு அறுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கக் கூடிய தெய்வம் விநாயகப் பெருமான். அதிலும் தட்சிணாயன காலத்தின் நிறைவு மாதமான ஆனி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானதாகும்.
Samayam Tamil sankashti chaturthi


ஒவ்வொரு ஏகாதசிக்கும் எப்படி தனிப்பெயர், சிறப்புகள் உள்ளதோ அதே போல் ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கும் தனியான பெயரும், தனியான சிறப்புக்களும் உண்டு. அந்த வகையில் ஆனி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு கிருஷ்ணபிங்கள சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். இந்த ஆண்டு கிருஷ்ணபிங்கள சங்கடஹர சதுர்த்தி, ஜூன் 25ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தி என்பதால் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும், திருமணம் போன்ற சுபகாரிய தடைகள் விலகுவதற்கும் விநாயகரை வழிபடுவதற்குரிய மிகவும் சிறப்புக்குரிய நாளாகும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று இதை மட்டும் பண்ணுங்க...உங்க வேண்டுதல் நிச்சயம் நடக்கும்

வசந்த காலத்தின் துவக்கமாக வரும் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு விரதம் இருந்து, வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும், பாவங்களும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. அதோடு, வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காக்கக் கூடிய சக்தி வாய்ந்த விரதமாகும். அனைத்து விதமான தடைகள், சவால்கள் ஆகியவற்றை கடந்து வெற்றியை அருளக் கூடிய ஆற்றல் இந்த சிறப்பு மிக்க நாளுக்கு உண்டு. கிருஷ்ணபிங்கள சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம்,செல்வம், வெற்றி என அனைத்து விதமான நலன்களையும் விநாயகப் பெருமான் அருள்வார்.

கிருஷ்ணபிங்கள சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பவர்களின் நீண்ட நாள் நிறைவேறாத விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான தடைகளையும் நீக்கி, அவர்களை சுற்றி இருக்கும் அனைத்து விதமான தீயசக்திகளையும் விநாயகப் பெருமான் அகற்றி விடுவார். இந்த விரதம் இருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட துன்பம் இருந்தாலும் அது நீங்கி விடும். குறிப்பாக நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்கள், கணவன்-மனைவிக்குள் ஓயாத பிரச்சனையால் மனவேதனையில் இருப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து, விநாயகரை மனமுருக வழிபட்டால் பிரச்சனைகள் விரைவில் தீரும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விருப்பமான விநாயகர் அகவல் படிப்பதும், "விக்னங்களை தீர்க்கும் விநாயகரா போற்றி", "ஓம் கம் கணபதியே நமஹ" என்பது போன்ற மந்திரங்களை 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. மாலையில் நடைபெறும் விநாயகர் பூஜையில் கலந்து கொண்டு, அதற்கு பிறகு சந்திர தரிசனம் செய்து விட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்