ஆப்நகரம்

கார் விற்பனையில் கலக்கல்.. கெத்து காட்டும் மாருதி சுஸுகி, ஹூண்டாய்!

சென்ற ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 3 May 2024, 2:43 pm
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகன விற்பனையில் சதனை படைத்துள்ளன. கார் விற்பனையில் கடந்த சில மாதங்களாகவே ஹூண்டாய் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை ஆண்டுக்கு 9.5 சதவீதம் அதிகரித்து 63,701 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 58,201 கார்களை விற்பனை செய்திருந்தது.
Samayam Tamil car sales


இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீத வளர்ச்சியுடன் மொத்தம் 1,68,089 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 1,60,529 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு சந்தையில் மொத்தம் 1,37,952 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விற்பனையைப் பொறுத்தவரையில், 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 1,37,320 கார்களை விற்பனை செய்திருந்தது. குறிப்பாக, 2023 ஏப்ரல் மாதத்தில் 14,110 யூனிட்களாக இருந்த ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் 11,519 ஆக குறைந்துள்ளது. இது தவிர, பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை சற்று சரிந்துள்ளது.



மறுபுறம், பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற பயன்பாட்டு வாகனங்கள் 2024 ஏப்ரல் மாதத்தில் 56,553 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் 2023 ஏப்ரல் மாதத்தில் இது 36754 யூனிட்டுகளாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் வேன் விற்பனை 12,060 ஆக இருந்தது. அதே நேரத்தில், இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் விற்பனை 2023 ஏப்ரல் மாதத்தில் 2,199 யூனிட்டுகளில் இருந்து 2024 ஏப்ரல் மாதத்தில் 2,496 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், உள்நாட்டு மொத்த விற்பனை ஏப்ரல் மாதத்தில் ஒரு சதவீதம் அதிகரித்து 50,201 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு ஏப்ரலில் 49,701 யூனிட்டாக இருந்தது. 2024 ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 59 சதவீதம் அதிகரித்து 13,500 யூனிட்டுகளாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 8,500 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்