Please enable javascript.armstrong murderers come with bombs in the fear over him as he was a boxer: ஒரே குத்தில் எதிரியை நாக் அவுட் செய்யக்கூடியவர் ஆம்ஸ்ட்ராங்.. பீதியில் வெடிகுண்டுகளுடன் வந்த ரவுடிகள்

ஒரே குத்தில் எதிரியை நாக் அவுட் செய்யக்கூடியவர் ஆம்ஸ்ட்ராங்.. பீதியில் வெடிகுண்டுகளுடன் வந்த ரவுடிகள்

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 6 Jul 2024, 7:15 pm
Subscribe

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை வீரர் என்பதால் அவரை நெருங்க பயந்து வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் வந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

armsstrong kai
சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பல மாதங்களாக ஸ்கெட்ச் போடப்பட்டதாகவும், அவர் குத்துச்சண்டை கலையில் வித்தகர் என்பதால் அவரை நெருங்கி கொலை செய்ய பயந்து, நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் போலீஸில் சரணடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கை தாங்கள் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும், வேறு ஒரு விவகாரத்தில் தான் ஆம்ஸ்ட்ராங் தீர்த்து கட்டப்பட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்று தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங்கை எவனாலும் நெருங்க முடியாது.. 1000 பேர் வந்தாலும் சமாளிப்பார்.. செல்வப்பெருந்தகை கண்ணீர்

இது ஒருபுறம் இருக்க, ஆம்ஸ்ட்ராங்கை அவரது வீட்டிற்கு அருகிலேயே அந்த கும்பல் கொலை செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் வீடு அமைந்திருக்கும் பகுதி முழுவதும் அவரது ஆதரவாளர்களும், நண்பர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். புதிதாகவோ அல்லது சந்தேகத்துக்கு இடமாகவோ அங்கு யார் சென்றாலும் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கண்ணில் இருந்து தப்ப முடியாது. எனவேதான், டெலிவரி பாய் டி - ஷர்ட்டுகளுடன் அந்த கும்பல் அப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது, இது ஒருசில வாரங்களில் போடப்பட்ட ஸ்கெட்ச் இல்லை என்று போலீஸார் கூறுகின்றனர். பல மாதங்களாக பக்காவாக போடப்பட்ட ஸ்கெட்ச் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யும் போது அவரிடம் நெருங்கவே ரவுடிகள் மிகவும் பயந்ததையும் காண முடிவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு காரணமும் இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் சிறந்த குத்துச்சண்டை வீரர் ஆவார். மாநில அளவில் பல போட்டிகளில் ஹெவிவெயிட் பிரிவில் சண்டையிட்டு ஜெயித்தவர் ஆம்ஸ்ட்ராங். மேலும், எதிரிகளை ஒரே குத்தில் நாக் அவுட் செய்யும் திறமையும் அவரிடம் உண்டு என அவரது நண்பரகள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி எல்லாம் விசாரித்த பிறகு தான், ரவுடிகள் களத்தில் இறங்கியுள்ளனர். முதலில் ஆம்ஸ்ட்ராங்கை பின்புறமாக பதுங்கி பதுங்கி வந்து ரவுடிகள் கத்தியால் வெட்டியுள்ளனர். வெட்டுப் பட்டவுடன் ஆம்ஸ்ட்ராங் திரும்பி, சண்டையிட தயாராகியுள்ளார். இதை பார்த்த ரவுடிகள் பயந்து விலகிச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில், மறு பக்கத்தில் பதுங்கியிருந்த 4 பேர் கத்தி, அரிவாளுடன் பாய்ந்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியுள்ளனர். மேலும், அவர் தங்களை தாக்கிவிடுவார் என்ற பயத்தில் கையெறி குண்டுகளையும் ஆம்ஸ்ட்ராங் மீது அவர்கள் வீசியுள்ளனர். ஆனால், அவை வெடிக்கவில்லை. இதையடுத்து, வேறு வழியில்லாமல் அவரை வெட்டிவிட்டு ரவுடிகள் தப்பியோடியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜே. ஜாக்சன் சிங்
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்