ஆப்நகரம்

1 முதல் 12ஆம் வகுப்பு வரை... பள்ளி மாணவர்களுக்கு வந்த எமிஸ் அப்டேட்... இதுதான் அந்த புது ரூட்!

பள்ளி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வாங்குவதற்கு நடப்பாண்டு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 4 Jul 2024, 5:52 am
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி திங்கள் அன்று புதிய கல்வியாண்டு தொடங்கியது. அன்றைய தினம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. 2024-25ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், சீருடை, நோட்டுகள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டு முதல் நாளில் இருந்தே வழங்கப்பட்டன. தற்போது பள்ளிகள் திறந்து ஒரு மாதத்தை எட்டவுள்ள நிலையில் கற்றல் நடவடிக்கைகளில் மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
Samayam Tamil TN School EMIS Update


மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

இந்நிலையில் வெளியூரில் இருந்து வந்து படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை முடிவடையும் வரை காத்திருக்க திட்டமிடப்பட்டது. தற்போது சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. வழக்கமாக வகுப்பு வாரியாக மாணவர்களை புகைப்படம் எடுத்து, உரிய விவரங்களை சேகரித்து போக்குவரத்து துறைக்கு அனுப்பி இலவச பஸ் பாஸ் பெறப்படும்.

எமிஸ் மூலம் பதிவு

இம்முறை எமிஸ் வலைதளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. EMIS என்பது கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு. இது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து பள்ளிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

தொலைபேசி எண்கள் சேகரிப்பு

மாணவ, மாணவிகளின் கற்றல் செயல்பாடுகள் அவ்வப்போது எமிஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்படும். கடந்த கோடை விடுமுறையின் போது கூட பெற்றோரின் தொலைபேசி எண்களை பதிவு செய்வதற்கு எமிஸ் பயன்படுத்தப்பட்டது. இந்த எண்கள் மூலம் மாணவ, மாணவிகளின் கற்றல் செயல்பாடுகளை நேரடியாக ரிப்போர்ட் செய்ய முடியும்.

பெற்றோர்களுக்கு அலர்ட்


இதற்காக வாட்ஸ்-அப் வழியிலான தகவல் தொடர்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மாணவ, மாணவிகளின் சிறிய விஷயங்கள் கூட பெற்றோருக்கு உடனே தெரிவிக்கப்பட்டு விடும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எமிஸ் மூலம் இலவச பஸ் பாஸ் வாங்க விண்ணப்பிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

இதற்காக மாணவர்களின் விவரங்களை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும். பின்னர் ஆய்வக உதவியாளர்கள், தொழில்நுட்ப பயிற்றுநர் ஆகியோரின் உதவியுடன் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி