![ptr palanivel thiagarajan car footwear hurled case high court madurai bench order to bjp functionaries ptr palanivel thiagarajan car footwear hurled case high court madurai bench order to bjp functionaries](https://tamil.samayam.com/thumb/111466312/ptr-palanivel-thiagarajan-car-footwear-hurled-case-high-court-madurai-bench-order-to-bjp-functionaries-111466312.jpg?imgsize=52932&width=380&height=214&resizemode=75)
ராணுவ வீரருக்கு அஞ்சலி
காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையை சேர்ந்த லட்சுமணன் கடந்த 2022ஆம் ஆண்டு பணியில் இருந்த போது வீர மரணம் அடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் லட்சுமணன் உடலுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்திவிட்டு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.
பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு
அப்போது, பாஜகவினர் சிலர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிடிஆருக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிலரை கைது செய்திருந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில் பிடிஆர் கார் மீது செருப்பை வீசிய விவகாரத்தில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக சேர்ந்த வேங்கை மாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கடும் காட்டம்
தமிழக அரசு தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, “ஒரு அமைச்சர் பயணிக்கும் போது, குறிப்பாக அவரது வாகனத்தில் தேசியக் கொடியை பொருத்தி பயணிக்கும் போது, செருப்பு வீசுவது என்பது தேசிய கொடியை அவமதிக்கும் செயலாகும். அதுமட்டுமின்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சரை திட்டி கோஷம் எழுப்பி உள்ளீர்கள்” என்றும் கருத்து தெரிவித்தார்.
வழக்கை சந்திக்க உத்தரவு
மேலும், அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இந்த வழக்கை எப்படி ரத்து செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “இந்த வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் முறையாக சந்திப்பதே சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையையும் ஒத்தி வைத்தார்.