Please enable javascript.BSP leader Armstrong Body Bury at Party Office Case Urgent Hearing : பகுஜன் சமாஜ் ஆபிசில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படுமா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு.. நாளை அவசர விசாரணை

பகுஜன் சமாஜ் ஆபிசில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படுமா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு.. நாளை அவசர விசாரணை

Authored byஎழிலரசன்.டி | Samayam Tamil 6 Jul 2024, 10:52 pm
Subscribe

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு அவசர வழக்காக நாளை விசாரிக்கப்பட உள்ளது.

ஹைலைட்ஸ்:

  • பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை
  • உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டு வழக்கு
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அவசர வழக்காக விசாரணை
BSP leader Armstrong Murder
BSP leader Armstrong Murder
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, உணவு டெலிவரி நிறுவன உடையை அணிந்து வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ஆம்புலன்ஸ் மூலமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுதொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 8 பேர் அடுத்த சில மணி நேரங்களில் காவல் துறையில் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடந்தது. அவரது உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னையில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனிடன் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதனை ஏற்ற தலைமை நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளை காலை 8.30 மணிக்கு இந்த வழக்கு காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு வரவுள்ளது. விசாரணை முடிவில் ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுமா என்பது தெரியவந்துவிடும். வழக்கை எதிர்நோக்கி அவரது ஆதரவாளர்கள் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு குடும்பத்தினரின் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்த உள்ளார்.
எழிலரசன்.டி
எழுத்தாளர் பற்றி
எழிலரசன்.டி
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்