Tamil Nadu Mk Stalin New Announcements Under Rule 110 In Assembly Session 2024
சென்னை டூ திருச்சி... ரூ.1,146 கோடியில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள்... மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு...!
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய கட்டுமானங்கள், சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
Authored byமகேஷ் பாபு | Samayam Tamil28 Jun 2024, 6:16 pm
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நாள்தோறும் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இடையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதுதவிர நீட் விவகாரம் தொடர்பான தனித் தீர்மானமும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி சிறப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அப்போது பேசுகையில், நகர்ப்புரங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சிறந்த பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இதுவரை 29 ஆயிரத்து 439 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 1 லட்சத்து 70 ஆயிரத்து 462 தனி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள்
மேலும் 172 திட்டப் பகுதிகளில் 79 ஆயிரத்து 94 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 89 ஆயிரத்து 429 தனி வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளுக்காக 6 ஆயிரத்து 685 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணியில் மட்டும் கவனம் செலுத்தி, அத்துடன் நிற்காமல், இந்த அரசு பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறுசீரமைப்பிலும் கவனம் செலுத்துகிறது. சிதிலமடைந்த கட்டுமானங்கள்
சென்னை மற்றும் இதர நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில நீண்டகாலப் பயன்பாடு மற்றும் தட்ப வெப்பநிலை காரணமாக சிதிலமடைந்துள்ளன. இந்தக் குடியிருப்புகளை முறையாகக் கணக்கெடுத்து, அவற்றை மறுகட்டுமானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் ஒதுக்கீடு
மறுகட்டுமானத்திற்கு பின் இக்குடியிருப்புகள், புதுமையான, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் பழைய குடியிருப்புகளில் முன்னர் வாழ்ந்த குடும்பங்களுக்கும், இதே திட்டப் பகுதிகளின் அருகில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். வல்லுநர் குழு ஆய்வு
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், 28 ஆயிரத்து 643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும்.
புதிய கட்டுமானங்கள்
இதன் முதற்கட்டமாக, 2024-2025 ஆம் ஆண்டில், சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப்பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர் திட்டப்பகுதி மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள 6 ஆயிரத்து 746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஆயிரத்து 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.