ஜூலை மாத மாற்றங்கள்!
ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த நிறைய விதிமுறைகளில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஜூன் மாதம் முடிந்து ஜூலை மாதம் பிறக்கவிருக்கிறது. இந்த ஜூலை மாதத்தில் பணம் விஷயத்தில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்று நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிலிண்டர் விலை!
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூலை 1ஆம் தேதி சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்து மோடி 3.0 அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நுகர்வோர்கள் இருக்கின்றனர்.
வங்கிகள் விடுமுறை!
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வரும் என்ற பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி முன்கூட்டியே வெளியிடும். அந்த வகையில் வருகிற ஜூலை மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கமான சனி - ஞாயிறு விடுமுறை தவிர்த்து மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இது தவிர உள்ளூர் விடுமுறையும் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
கார் விலை உயர்வு!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களின் விலையை ஜூலை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்ட இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு அனைத்து வகையான வணிக வாகனங்களுக்கும் பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ள. ஆனால் வெவ்வேறு மாடல்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு ஏற்ப விலை உயர்வில் வித்தியாசம் இருக்கும்.
மத்திய பட்ஜெட்!
மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக்கான பட்ஜெட் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 22ஆம் தேதியன்று தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருந்த தனது ஐந்தாண்டு காலத்தில் இதுவரை 6 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட்டாகும்.
பேடிஎம் வாலட்!
பேடிஎம் பேமெண்ட் வங்கி கடந்த ஓராண்டு அல்லது அதற்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத மற்றும் இருப்பு பூஜ்ஜியமாக இருக்கும் செயலற்ற வாலட்டுகளை ஜூலை 20ஆம் தேதியன்று மூடப்போவதாக அறிவித்துள்ளது. பேடிஎம் வாலட்டை மூடுவதற்கு 30 நாட்களுக்கு முன்பு பயனர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். எனவே இந்த கடைசி தேதிக்குள் பேடிஎம் வாலட்டில் பரிவர்த்தனை செய்து அதை ஆக்டிவாக வைத்திருக்கலாம்.
வருமான வரி ரிட்டன்!
2023-24 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்று வருமான வரித் துறை நிர்ணயித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரித் தாக்கல் செய்வது நல்லது. இந்தத் தேதிக்குள் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியாவிட்டாலும் 2024 டிசம்பர் 31 வரை தாமதமான ரிட்டனைத் தாக்கல் செய்யலாம்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு!
ஜூலை 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கான அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் ரிவார்டு பாயிண்டுகளை சேமிப்பதை நிறுத்துவதாக எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு!
ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தங்களை ஜூலை 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இதில் அனைத்து கார்டுகளிலும் (எமரால்டு பிரைவேட் மெட்டல் கிரெடிட் தவிர) கார்டு மாற்றுக் கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.