மனம் இறங்காத கர்நாடகா
கர்நாடகா தமிழ்நாட்டிற்கு இதுவரை மனம் வந்து தண்ணீர் விட்டதாக சரித்திரமே இல்லை. 50 ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கு நீடித்து வரும் காவிரி பிரச்னையை தீர்க்கவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டு ஆண்டு நமக்கு வர வேண்டிய 177.25 டிஎம்சி நீரில் 90 டிஎம்சிதான் வந்தது. இந்த ஆண்டு அதையும் கூட கர்நாடகா திறக்க மறுக்கிறது.
குறுவை சாகுபடி பாதிப்பு
கர்நாடகா தண்ணீர் திறக்காததால் கடந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் ஹெக்டேருக்கு 13,000 ரூபாய் இழப்பீடு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல ஜூன் 12ஆம் தேதி குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம்
இந்த நிலையில் கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறக்க தமிழக அரசு கோரியது. ஆனால், தங்களுக்கே தண்ணீர் இல்லை என கர்நாடகா கைவிரித்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள் அணைகளை ஆய்வு செய்த பிறகு தண்ணீர் திறப்பு தொடர்பாக உத்தரவிட காவிரி ஆணையம் முடிவு செய்தது.
கர்நாடக காவிரியில் கனமழை
அதே சமயம் கர்நாடகாவில் கடந்த வாரம் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குடகு உள்பட காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்வதால், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களும் மழை பெய்யும் என்பதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஆர்எஸ் அணை 100 அடியை எட்டுது
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 14,135 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு என்பது சில நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து 21.36 டிஎம்சியாக மாறியுள்ளது. அணையின் நீர்மட்டம் 99.30 அடியாக உள்ளது. ஒரே வாரத்தில் நீர்மட்டம் 12 அடி வரை உயர்ந்துள்ளது. அநேகமாக நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து சுமார் 532 கன அடி வெளியேற்றப்படுகிறது.
கபினி அணை நிலவரம்
காவிரி படுகையில் உள்ள முக்கிய அணையான கபினிக்கு 9,807 கன அடி தண்ணீர் வருகிறது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி என்ற நிலையில், இன்று காலை 16.78 டிஎம்சியாக நீர் இருப்பு இருந்தது. இதனால் விரைவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணையில் இருந்து சுமார் 2917 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காரணமாகவும், தமிழ்நாடு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 3000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நேற்று 818 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி சுமார் 1223 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. நேற்று 39.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று சற்று உயர்ந்து 39.67 அடியாக உள்ளது. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர் இருப்பு 11.91 டிஎம்சியாக இருந்தது. இன்று 11.92 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி குடிநீர் தேவைக்காக மட்டும் வெளியேற்றப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளது காவிரி டெல்டா விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர வேண்டும். அதன்மூலம் காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதே டெல்டா விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.