காவிரியில் தமிழகத்துக்கு அநீதி
காவிரியின் தலைப் பகுதியில் இருப்பதால் முழு காவிரி நீரும் தங்களுக்கே சொந்தம் என்பது போல கர்நாடகா நடந்துகொள்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு இதுவரை காவிரி தண்ணீர் நியாயமான முறையில் கிடைத்தது இல்லை. ஒவ்வொரு முறையும் போராடியே பெற வேண்டிய நிலை உள்ளது. பல வருடங்கள் சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
மேட்டூர் அணை திறப்பு இல்லை
ஆனால், காவிரி ஆணையத்தின் உத்தரவுகளைக் கூட கர்நாடக அரசு அமல்படுத்துவது இல்லை. கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரில் சுமார் பாதியளவு தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இந்த ஆண்டும் அதேபோல தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரவே இல்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வெகு குறைவாக இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரும் திறக்கப்படவில்லை.
மேட்டூர் அணை நீர்மட்டம்
இந்த சூழலில் மேட்டூர் அணையைப் பொறுத்தவரை நீர்மட்டம் 39.65 அடியாக இருந்து வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 818 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு என்பது 11.91 டிஎம்சியாக இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து குறைவாகவும் வெளியேற்றம் அதிகமாகவும் உள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
கர்நாடகாவில் கனமழை
அதே சமயம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்பட காவிரி நதியின் குறுக்கே உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அணைகள் முழு கொள்ளளவை எட்டவும் வாய்ப்புகள் உள்ளன.
வேகமாக நிரம்பும் அணைகள்
தற்போதைய நிலவரப்படி கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து 8,787 கன அடியாகவும், நீர் இருப்பு 20.19 டிஎம்சியாகவும் உள்ளது. கபினி அணைக்கான நீர்வரத்து 11,269 கன அடியாகவும் நீர் இருப்பு என்பது 16.20 டிஎம்சியாகவும் உள்ளது. இரு அணைகளில் இருந்தும் சுமார் 2000 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தே காணப்படுகிறது.
காவிரி ஆணையக் கூட்டம்
இந்த சூழலில் காவிரி ஆணையம் என்ன உத்தரவு போடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த வாரம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தங்களுக்கே தண்ணீர் இல்லை, அதனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா தெரிவித்தது. இதனால் எந்த முடிவும் எடுக்காமல் காவிரி ஆணையக் கூட்டம் நிறைவு பெற்றது.
கர்நாடகா எஸ்கேப் ஆக முடியாது
தற்போது கர்நாடகாவில் நல்ல மழை பெய்வதுடன் அணைகளின் நீர்வரத்தும் அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தங்களிடம் தண்ணீர் இல்லை என்று சொல்லி காவிரி ஆணையத்திடம் இருந்து கர்நாடகா எஸ்கேப் ஆக முடியாது. அப்படி எஸ்கேப் ஆனாலும் ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் ஆணையத்தின் கையில் இருக்கும் என்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை தவிர கர்நாடகாவுக்கு வேறு வழியில்லை.
விவசாயிகள் காத்திருப்பு
காவிரியில் இருந்து கர்நாடகா தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்பதே காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி தண்ணீர் திறக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நிரம்பும். அதன்மூலம் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால் எப்போது உத்தரவு வரும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.