மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 (Lok sabha election results 2024)
இந்தியா முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு பதிவு இயந்திரத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் சீல் வைக்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வார்கள். அங்கு வாக்கு எண்ணும் நாள் வரை துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள், காவலர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு இருக்கும். முறைகேடுகளை தடுக்க அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கு காவல் இருப்பார்கள்.
வாக்கு எண்ணிக்கை அன்று சரியாக காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அனைவரின் முன்னிலையிலும் தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குப் பதிவு இயந்திரத்தின் சீல்-ஐ பிரித்து திறப்பார். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்?
ஒரு மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முழுவதும் ஒரே மண்டபத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையிலும் 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். பல சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும். இவை அனைத்தும் உடனுக்கு உடனாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு உடனடியாக வெற்றிச் சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்குவார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால்?
வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடந்ததாக தெரிய வந்தால் வேட்பாளர் உடனடியாக வாக்கு எண்ணும் மைய அதிகாரியிடம் புகார் தெரிவிக்க வேண்டும். முறைகேடு நடந்திருப்பது தெரிந்தால் தேர்தல் இறுதி முடிவை அறிவிக்காமல் நிறுத்திவைப்பதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது. பின்னர், வாக்கு எண்ணும் மைய அதிகாரி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.